
இயல்புகளை இளக்காரமாக்கி
எக்காளமிடுகிறீர்கள்
இயலாமைகளை பகிரங்கபடுத்தி
கெளரவிக்கிறீர்கள்
ஒரு மண்புழுவைப் போல
எப்போதும் மண்ணிற்குள் தலையை
புதைத்தபடியே வாழச்செய்வதில்
மகிழ்ச்சி கொள்கிறீர்கள்
சரமாரியாக இவ்வாயுதங்களை ஏவி
திக்குமுக்காட வைத்து
களிப்புறீர்கள்
என்னை நோக்கி வீசப்படும் சீற்றங்களை
புறக்கணிப்புகளை சிறுமைப்படுத்துதலை
மற்றுமொரு கண்ணியாக்கி
நான் நீளக் கற்றுக்கொண்டிருக்கிறேன்
இன்னும் இன்னும் ஆழமாய்
என்னை புதைத்தபடி
உங்களுக்கான எனது நன்றிகளுக்காய்
யாரும் பார்க்காத உயரங்களில்
வளர்ந்து உதிர்ந்த பூக்களின் இதழ்களோடு
மிச்சமிருக்கும் என் பிரியங்களையும் உதிர்த்து
என் கனவுகளை ஏமாற்றங்களை
அவமானங்களைச் சேர்த்து
மின்னல்கள் உதிரும் ஒரு
மலைசிகரத்தின் அறியாத ஒரு பள்ளத்தில்
புதைத்துவைப்பேன்
காட்டுத்தீயில் கருகி
மிச்சமிருக்கும் வேர்க்கூடுகளுக்குத்
துணையென
அவை விதையென ஒரு விருட்சத்தை
விளைவிக்கும்
நான் பார்க்க இல்லை எனினும்
பிறிதொரு கோடைகாலத்தின்
தங்க நிற மாலையில் அவ்விருட்சம்
பூக்கும்
அதன் மொட்டுகள் விரிந்து
வனமெங்கும் படரும்
வண்ணத்துபூச்சிகளின் சிறகுகள்
1 comment:
kalam orunaal marum. nam kavalaigal yavum neengum.
Post a Comment