Friday, June 3, 2011

இருளினூடே சில இசைக்குறிப்புகள்…



நமக்கான இறுதி முடிவை
நாளை சொல்வதாய் நீ
சொல்லி போன அந்த நாளின்
தீராமல் நிலவொளி வடிய
நீண்டு கொண்டே இருந்த
பின்னரவில் தான்
அந்த வயலின் இசை
மெல்ல
அறைக்குள் நுழைந்து
முழுவதுமாய் நிறைந்தது
அதன் சோகம் தாக்கி
உன் முடிவு குறித்து நினைவு திரும்ப
சடசடவென இசைக்குறிப்பின்
குறியீடுகளாய் உதிரத் தொடங்கியது
அடுக்குகள் மாறி விளையாட்டு காட்டி
துள்ளலான இசையாய் மீண்டும்
படர்ந்தது
மெல்லிய‌ விடியல் ஒளியில்
நம்பிக்கைக் கீற்றுத் தெரிய
உறங்கிப்போன என்னை
எழுப்பிய உன் அழைப்பில்
உன் குரல்
இயல்பானதாய் இல்லை
உன் முடிவும்.
எதிர்பார்த்தது போலவும்
எதிர்பாராதது போலவும்.
தளர்ந்து போய் அந்த
இசைக்குறிப்புகளைத் தேடினேன்
விட்டத்தின் அரித்த மிச்சங்களைப் போல
தரையில் தூசியாய் விழுந்திருந்தன
அதன் பின் அந்த‌
வயலின் இசைக்கவே இல்லை

4 comments:

Anonymous said...

இருளின் ஊடே இரைந்தது இசைக் குறிப்புகள் மட்டுமல்ல கனவுகளும் தான்..

திருநாவுக்கரசு பழனிசாமி said...

வசீகரிக்கிறது மென்சோகத்தின் இசை

இராம்குமார் said...

அருமை நண்பரே

Anonymous said...

nalai namathey,ennum nalum ullathey.nila ponal enna,vinmeengal ullana.

LinkWithin

Related Posts with Thumbnails