Tuesday, December 28, 2010

சில‌ ம‌ழை இர‌வுக‌ள்…



ஒரு மழை இரவில்
எதிரெதிர் திசைகளிலிருந்து
புறப்பட்டு
பயணிக்கிறோம்
தேற்ற விதிகளின்படி
ஏதோ ஒரு புள்ளியில்
சந்திக்க‌ வேண்டிய‌து
நிதர்சனங்களில்
ந‌ட‌க்காமலே
பயணம் தொடர‌
இரவெல்லாம் அடித்து
பெய்து கொண்டிருக்கிறது
மழை

-0-0-0-0-0-0-0-0-0-0-

அந்த‌ ம‌ழை இர‌வில்
ஜன்னல்கள் இல்லாத
‌அறையை
சபித்தபடியே
போர்வைக்குள்
சுருள்கிறேன்
நீ இருந்த‌ இர‌வுக‌ளின்
நினைவுகள் வருடியபடி
மெல்ல‌ தொட‌த்துவ‌ங்குகிற‌து
சாரல்

-0-0-0-0-0-0-0-0-0-0-



எதுவுமில்லை இனி
எனக் கூறி
பிரிந்துசென்ற
அன்றொரு இரவில்
ஜன்னல் வழி
கிழித்தெறிந்த‌
நினைவுத்துண்டங்களை
நனைத்து
புயலாய் முகத்தில்
அறைந்துபோகிறது
முடிவில்லாமல் நீளும்
இந்த இரவின்
மழை

-0-0-0-0-0-0-0-0-0-0-

மழை இரவுகளுக்கும்
உன‌க்கும் சில
‌ஓற்றுமைக‌ள்
உண்டு
அவையும்
பிரத்யேகமாய்
ஒரு நிறம்
ஒரு மணம்
ஒரு இசை
ஒரு மிதமான குளிர்
கொண்டிருக்கின்றன
நீ அருகில் இருக்கும்
சூழல்களைப்
போலவே



நன்றி: திண்ணை


22 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

அருமை வாழ்த்துகள்

Anonymous said...

எனக்கெனவோ உனக்கெனவோ பெய்வதில்லை மழை!
எனினும் உன்நினைவு பொழியத் தொடங்குகிறது இம்மழை இரவில்..

மிக இதமாக வருடும் தென்றல் போல சாமரம் வீசுகிறது உங்கள் கவிதைகள். மிக அழகு!

//நினைவுத்துண்டங்களை நனைத்து//

செம!

Kaki said...

ungal kavidai - miga azhagu, Photo is awesome

Anonymous said...

மழைக்கவிதைகள் பனிக்காலத்தோடு சேர்ந்து குளிர்..

நேசமித்ரன் said...

நல்லாருக்குங்க :)

மிருணா said...

மழையின் குளிரும் நினைவின் வலிக்கும் பனியும் உணர வைக்கும் வரிகள்.அருமை.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

ஒவ்வொரு மழையும்,ஒவ்வொரு இரவும் சலிக்காத நினைவுகளை தந்து செல்கிறது இவற்றைப்போலவே

குட்டிப்பையா|Kutipaiya said...

@ ஹாசிம் - நன்றி!

@ பாலாஜி - கமெண்டில் ஒரு கவிதையா ;)

நன்றி!!

குட்டிப்பையா|Kutipaiya said...

@kaki - நன்றி!! :)

@ தமிழ் - குளிரோடு சேர்ந்த மழை! மழையின் குளிர்.. எப்படி வேணும்’னாலும் :) :) நன்றி!

குட்டிப்பையா|Kutipaiya said...

@நேசன் - மிக்க நன்றி. ரொம்ப நாள் கழித்து பார்க்கிறேன் இங்க :)

@ சைக்கிள் - வாங்க! வித்தியாசமான பெயர். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

குட்டிப்பையா|Kutipaiya said...

@ திரு - அழகான பின்னூட்டமும் கூட. நன்றி.

கமலேஷ் said...

நினைவுகள் மேவும் இந்த மழை விரல்களில்
அழகான ஒரு வாசனை இருக்கிறது

வாழ்த்துக்கள் ,

தொடருங்கள்...

Jerry Eshananda said...

சீதா,உங்கள் கவிதை மழையில் சொட்ட சொட்ட நனைந்தேன்.

பா.ராஜாராம் said...

இரவில் பெய்யும் மழைக்கென தனித்த இசை இருக்கிறது. அது, இங்கும் இருக்கிறது!

ஹேமா said...

மழை...சந்தோஷமா இல்லை சாபமா சிலசமயங்களில் மட்டும் !

R. Gopi said...

கவிதை மழை மாதிரி அல்லது அருவி மாதிரி கொட்டுதே:)

அன்புடன் அருணா said...

ஆஹா மழை!!

VELU.G said...

ரொம்ப அருமை எல்லாமே

இது தான் மனதுக்கு பிடித்தது என்று பிரித்தறிய முடியாமல் எல்லாமே சிறப்பாக இருந்தது

கோநா said...

இதமான(கவிதை)சாரல்,வாழ்த்துக்கள்.

வருணன் said...

மழையும் இரவும் தங்களுக்கும் பிடிக்கும் போல... எனது மனதுக்கும் இவை இரண்டுமே நெருக்கம். வார்த்தைகளுக்கான படத் தேர்வு உங்கள் ரசனைக்கு சாட்சியாய்... அவையே ஒரு காட்சிக் கவிதை போல இருந்து வார்த்தைகளின் கனம் கூட்டுகின்றன... அருமை பாரதி...

பத்மா said...

class class ..how did i miss this?

Pranavam Ravikumar said...

வாழ்த்துகள்!!!

LinkWithin

Related Posts with Thumbnails